சீனாவின் கட்டுமானக் கலைக்கு சான்றாக விளங்குவதும், அதன் சரித்திரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுமான சீனப்பெருஞ்சுவரின் பகுதியொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
சீனாவின் ஹீபீ மாகாணத்தின் , சஹஞ்சியாகு நகரில் அமைந்துள்ள சுவரில் சுமார் 100 அடி நீளமான ஒரு பகுதியே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.

அங்கு பெய்துவரும் கடும் மழை மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமானப்பணி ஆகியவை காரணமாகவே சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் 1484 ஆம் ஆண்டு ’மிங்’ அரச வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில் சீனப் பெருஞ்சுவரின் சிதைவடைந்த ஒரு பகுதி மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.
சீனப் பெருஞ்சுவரானது 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
























